KAJ

KAJ
K.Abdul Jabbar

Monday, July 12, 2010

கீழக்கரையில் தரமில்லாத மின் கம்பிகள் வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை

கீழக்கரையில் உள்ள மின் பாதையில் செல்லும் தரமில்லாத மின் கம்பி காரணமாக வீடுகளுக்கு குறைந்தழுத்த மின் சப்ளை கிடைப்பதால் மக்கள் அவதியடைகின்றனர். கீழக்கரையில் ஆயிரக்கணக்கன மின் இணைப்புகள் உள்ளன.இங்குள்ள துணை மின் நிலையம் பெயரளவில் உள்ளதே தவிர, கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பிகள் அனைத்தும் அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. தரமில்லாத கம்பிகளால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். சீரான அழுத்தம் கிடைக் காததால் மின் சாதன பொருட்களை வீடுகளில் பயன்படுத்த மக்கள் அச்சமடைகின்றனர்.மின் விசிறிகள் குறைந்த வேகத்தில் சுழல்வதால் இரவு நேரங்களில் குழந் தைகள் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர்.இப்பிரச்னையை தீர்ப்பதில் மின் வாரிய அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து வருகின்றனர். மின் கம்பங்களில் உள்ள வயர்கள் சிலந்தி கூடு போல் காணப்படுகிறது. சீதக்காதி சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் தூண்களில் சிமென்ட் அரிக்கப் பட்டு அபாய நிலையில் உள்ளது. தெருக்களில் உள்ள பல மின் கம்பங்கள் சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ளது.தாமதமாக பணம் செலுத்தினால் ஆர்வத்துடன் அபராதம் வசூலிக்கும் மின்சார துறை ,மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கவும் அக்கறை செலுத்த வேண்டும்.

மத நல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடும் செயல் அதிகரிப்பு தவ்ஹீத் ஜமாத் மீது பள்ளி தாளாளர் புகார்

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மாணவர்களை அழைத்து சென்று மதநல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடுவதாக கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகீம் புகார் செய்துள்ளார். அவர் கூறியதாவது; அனைத்து சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக 1981ம் ஆண்டு முதல் கீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1500 மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை கீழக்கரையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் அழைத்துச் சென்று மூளை சலவை செய்து மதநல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடுகின்றனர்.முஸ்லிம் மாணவர்கள் தாடி வளர்த்து, தொப்பி அணிந்து பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். மதநல்லிணக்கத்துடன் இயங்கி வரும் பள்ளியில் இவர்களின் குறுக்கீடு காரணமாக மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாலிபான் இயக்கம் போல் செயல்பட்டு மாணவர்களை பெற்றோர்களுக்கு எதிராக செயல்படவும், பள்ளிக்கு எதிராக கிளர்ச்சி செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த 8ம் தேதி பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் பள்ளி முதல்வரை தரக்குறைவாக பேசி அலுவலக பணியாளர்களை மிரட்டி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக முதல்வர்,கலெக்டர்,எஸ்.பி.,ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.

Wednesday, July 7, 2010

கீழக்கரை மின்கம்பியில் தீ

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மின்கம்பியில் நேற்று பகல் திடீரென மின்பொறி ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கீழக்கரையில் டிரான்ஸ் பார்ம் மற்றும் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளன. இதனால் ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வியாபாரிகள் என பலரும் அவதியடைகின்றனர். இந்நிலையில் நேற்று பகல் வள்ளல் சீதக்காதி சாலை மின்கம்பியில் தீ பொறி உருவானது.இதை கண்ட பெண்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். 15 நிமிடங்களுக்கு பின் மின் ஊழியர் வந்து டிரான்ஸ்பார்மை ஆப் செய்தததால் அப்பகுதி மக்கள் பெருமூச்சுவிட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

Sunday, July 4, 2010

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலி கீழக்கரையில் குடம் குடிநீர் நான்கு ரூபாய்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலியாக கீழக்கரையில் லாரிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் நான்கு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் நீரிலும் உப்பு தன்மை அதிகரித்து சுவை குறைந்துள்ளது.இதை தொடர்ந்து உச்சிப்புளி,இருமேனி,பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் லாரியில் நீர் எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வரை குடம் 3.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 காசு அதிகரிக்கப்பட்டு நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் லாரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பல்வேறு கிராமங்களில் தேவையற்ற இடங்களில் குளங்கள் வெட்டப்பட்டு அரசின் நிதியை பாழாக்குவதை தவிர்த்து, சுத்தம் செய்யப்படாமல்,மூடப்படாத நிலையில் உள்ள குடிநீர் கிணறுகளை தூர் வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 166 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள உள்ள காவிரி நீர் வழங்குவதற்கான திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துவங்க வேண்டும்.மாவட்ட நிர்வாகமும் கீழக்கரை மக்களின் குடிநீர் சிரமத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.