KAJ

KAJ
K.Abdul Jabbar

Wednesday, June 30, 2010

திருட்டு வழக்கில் 468 பவுன் நகை மீட்பு இருவர் கைது;5 பேர் தலைமறைவு

ராமநாதபுரம் டாக்டர் வீட்டில் நடந்த "மெகா' திருட்டு சம்பவத்தில், 468 பவுன் நகை மீட்கப்பட்டது. இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ,ஐந்து பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் சேட் இப்ராஹிம் நகரில் வசித்து வரும் டாக்டர் கியாவுதீன் மகள் அகமது பசிகா வீட்டில், கடந்த 2009 அக்.,22 இரவில் 500 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஓடப்பட்டி கணேசன் உறவினர் பாரத்குமாரை கைது செய்து ,அவரிடமிருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவரது தகவல்படி ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை சேர்ந்த முகமது அனீஸ்(28) என்பவரை விசாரித்ததில் ,தெற்குத்தரவை வடக்குத்தெருவை சேர்ந்த பரீத் அகமது, பால்கரையை சேர்ந்த தொப்பி ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து 415 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் டாக்டர் கியாவுதீன் மகள் வீட்டில் திருடப்பட்டது .
பிரதீப்குமார் எஸ்.பி., கூறியதாவது: பெரிய அளவில் நடந்த திருட்டு என்பதால் இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையை நாங்கள் வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட அளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு பேர் குற்றவாளிகளாக உள்ளனர். பாரத்குமார், அனீஸ் தவிர மற்றவர்களை தேடிவருகிறோம், என்றார்.
ரூ.100க்கு ஒரு பவுன்: எதிர்பாராத விதமாக சிக்கிய இந்த நகைகளின் எண்ணிக்கை அனீஷிற்கு மிதப்பை தந்தது. எதற்கெடுத்தாலும் நகைகளை எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார். பெண்களிடம் பந்தா செய்வதற்காக ஒரு பவுன் நகையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவமும் நடந்துள்ளது. வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட நகையை பயன்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
விபத்தால் தகர்ந்த அடுத்த "டார்க்கெட்': டாக்டர் வீட்டில் கிடைத்த நகையால் , பெரிய திருட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும் என முடிவு செய்த அனிஷின் அடுத்த டார்கெட், ராமநாதபுரம் "தங்கமயில்' ஜூவல்லரியாக இருந்தது. நத்தத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற போது, சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது.இதனால் அவனது "டார்க்கெட்' தாமதமானது.

செய்யது ஹமீதா கல்லூரியில் ராகிங் தடுப்பு கமிட்டி கூட்டம்

கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்கை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டதின் படி, காரைக்குடி அழகப்பா பல்கலை கழகம் உத்தரவை தொடர்ந்து, கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரியில் 42 பேர் கொண்ட ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. முதல்வர் அபுல் ஹசன் சாதலி பேசியதாவது: கல்லூரியில் ராகிங் போன்ற சம்பவங்கள் நடந்தால் அது குறித்து விசாரிக்கவும்,தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பேராசிரியர், போலீஸ் உள்ளிட்ட பல குழு கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, என்றார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரை, பி.ஏ.டி.,அமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தானம்,மாயாகுளம் ஊராட்சி தலைவர்(பொறுப்பு) சிவா,மாணவர்கள் சஹிர்தீன்,பாரதி கண்ணன் மற்றும் பலர் பேசினர் .பேராசிரியர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.

கீழக்கரையில் போக்குவரத்து ஸ்டேஷன் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது.ஆணையாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார். வரி மற்றும் வரியற்றஇனங்கள் கேட்பு,வசூல்,நிலுவை விபரம் வாசிக்கப்பட்டது. நகராட்சி கூட்ட அரங்கில் நவீன ல் கணினி மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பணியாளர் நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் மணல்,ஜல்லி, செங்கல் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைமை எழுத்தர் மதிவாணன் நன்றி கூறினார்.

Tuesday, June 29, 2010

கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் திருப்புல்லாணிக்கு மாற்ற முடிவு : மக்கள் அதிர்ச்சி

கீழக்கரை: கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகத்தை திருப்புல் லாணிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். கீழக்கரையில் 1994 ஜன., 17ம் தேதி டி.எஸ்.பி.,அலுவலகம் துவங்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கீழக்கரை, திருப்புல் லாணி, ஏர்வாடி, திருஉத்தரகோசமங்கை, சாயல்குடி, சிக்கல், வாலிநோக்கம் ஆகிய ஆறு போலீஸ் ஸ்டேஷன்களின் தலைமையிடமாக விளங்கி வருகிறது. இந்த பகுதி மக்களின் மையப் பகுதியாக கீழக்கரை விளங்குவதால் மக்கள், வழக்கு, புகார் மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதாக டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து சென்றனர்.நடப்பாண்டில் கீழக் கரை தாலுகாவாக மாற்றப் பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளதால் பல்வேறு அரசு அலுவலகங்களை மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந் நிலையில் டி.எஸ்.பி., புதிய அலுவலகம் கட்ட கீழக்கரையில் இடம் கிடைக்காதால் திருப்புல்லாணிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. போலீஸ் தரப்பில் கூறியதாவது: கீழக்கரையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் டி.எஸ்.பி., அலுவலகம் போதுமான வசதிகள் இல்லாததால் தொடர்ந்து இயங்கமுடியாத நிலை உள்ளது. திருப்புல்லாணியில் கட்டடம் கட்ட தேவையான நிலம் உள்ளதால், அங்கு டி.எஸ்.பி., அலுவலகம் கட்டுவதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளது, என்றனர்.

Thursday, June 24, 2010

தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா

கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் முதல்வர் சுமையா தலைமையில் நடந்தது. மாணவி பாத்திமா கிராத் ஓதினார். பேரவையின் ஆலோசகர் தாஜ்நிஸா பேகம் வரவேற்றார். மாணவியர் பேரவையின் புதிய நிர்வாகிகள் தலைவி ரபியா மகுசூமா தலைமையில் உறுதி மொழி எடுத்தனர். தலைவராக ரபியா மகுசூமா, உதவி தலைவராக பரீதாபானு,பொதுசெயலாளராக அகமது முஹ்பிதா, இணை செயலாளராக ஹூசைனியா, துறை செயலாளர்களாக குத்புசியா பேகம், திவ்னம்மாள், அமீரா ஹாஜா, அனீஸ் பாத்திமா, ஷிபானா, சிந்து பிரியா, சகானா பாத்திமா, முகம்மது ஹஸிபா, சுபா, சாலிஹா பாத்திமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதயம் குரூப் ஆப் கம்பெனிஸ் சி.இ.ஓ., முத்து மாணவிகளின் கல்வி முன்னேற்றத் திற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

Saturday, June 19, 2010

நோட்டு,புத்தகம்வழங்கும் விழா

கீழக்கரை மக்கள் சேவை இயக்கத்தின்(KWAT) சார்பில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம் வழங்கும் விழா சங்க கட்டடத்தில் நடந்தது.கீழக்கரையில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் ஏராளமான மாணவ,மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் பஷீர் அகமது,இன்ஸ்பெக்டர் சங்கு ஆகியோர் நோட்டு,புத்தகம் வழங்கி பேசினர். சங்க தலைவர் ஜமால் காதர்,செயலாளர் இஸ்மாயில்,ஹம்ரூன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கருத்தரங்கு

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு,மின்னணுவியல் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவ, மாணவிகளுக்கு "மொட்டிவேசன் டுவாட்ஸ் சக்ஸஸ்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அலாவுதீன் துவக்கி வைத்து பேசினார்.வேலை வாய்ப்பு துறை அதிகாரி சேக்தாவுத் வரவேற்றார். மின்னணுவியல்,தொடர்பியல்துறையில் உள்ள முன்னேற்றங்கள், மற்றும் ஆளுமைத்திறன் பற்றிய விளக்கங்களை திருச்சி சேப் அகடாமி பயிற்சியாளர் சுந்தரம் கூறினார். ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை தலைவர் சேக்தாவுத் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்

பள்ளி அருகே பாழடைந்த பங்களா: மாணவிகளை குறிவைக்கும் கும்பல், விழித்துகொள்ளுமா பள்ளி நிர்வாகம்


ராமநாதபுரத்தில் பெண்கள் பள்ளி அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் மாணவிகளின் வாழ்க்கை கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கழிப்பறையில் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளநிலையில், ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல் பள்ளி அருகில் தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கட்டடத்தில், சமூக விரோத நடமாட்டம் அதிகம் உள்ளது. நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி திறந்த வெளியாக உள்ள இந்த கட்டடத்தின் அருகே ,குறைவான குடியிருப்புகள் உள்ளது இவர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி உள்ளது. இந்த கட்டடத்திற்கு யார் வருகிறார், எதற்கு வருகிறார், என கேட்க ஆளில்லாததால், சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் சர்வசாதாரணமாக வந்து செல்கின்றனர். பாழடைந்த கட்டடத்திற்கு மிக அருகில் பெண்கள் பள்ளி ,மாணவியர் விடுதி உள்ளதால், இந்த கும்பலால் மாணவியர்கள் பாதிக்கும் நிலை அதிகமாக உள்ளது. இதுதவிர, வார விடுமுறை நாட்களில் கார்களில் பெண்களை அழைத்து வந்து ,பாழடைந்த கட்டடத்தில் உல்லாச வாழ்க்கை நடத்துவதும், மதுபான கூடமாக பயன்படுத்தும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக இப்பகுதியினர் பலமுறை போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் முறையான நடவடிக்கை இல்லை. இப்பகுதியினர் கூறியதாவது: சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக ,குறிப்பாக சனி ஞாயிறு நாட்களில் குறிப்பிட்ட நேரத் தில் தெரு விளக்குகள் அணைக்கப் படுகிறது. மாலை நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களுடன், பாழடைந்த கட்டடத்துக்கு பள்ளி சீருடையுடன் மாணவிகள் வருவதை பலமுறை பார்த்துள்ளோம். இங்கு ஆள்நடமாட்டம் குறைவாக உள்ளதால் ,இந்த கட்டடத்தை பல தரப்பினரும் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இங்கு குடியிருக்கவே எங்களுக்கு அச்சமாகவே உள்ளது, என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.காவனூர் பாலத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததும், மதுரை ரோட்டில் காட்டுகருவேல மரங்களுக்கு இடையே இளம் பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததும் ,இதுபோன்ற செயல் களால் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள் ளது. எனவே, இப்பகுதியில் தினமும் போலீசார் அதிரடி ரோந்து வந்து , சமூகவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும், ""பாழடைந்த கட்டடத்தை இடித்து, பெண்கள் பள்ளியின் பின்புறம் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளி நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை,'' எடுக்க வேண்டும்.

Friday, June 18, 2010

ஏர்வாடியில் வாந்தி, பேதிக்கு 2 பேர் பலி-பலர் மருத்துவமனையில்அனுமதி

ஏர்வாடி: ஏர்வாடியில் திடீர் வாந்தி பேதிக்கு 2 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏர்வாடி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கட்டளைதெரு, கோவில் வாசல் தெருக்களை சேர்ந்த ஒரு சிலருக்கு நேற்று திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. உடனே அவர்கள் ஏர்வாடியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் லட்சுமி நரசிங்கரபுரம், முகைதீன் பள்ளிவாசல் தெரு, ரேசையாபுரம், ஆர்சி கம்பவுண்ட், ஷாஜகான் தெரு, பொத்தைய தெருவை சேர்ந்தவர்களுக்கும் திடீரென்று வாந்தி பேதி ஏற்பட்டது.

அப்பகுதியை சேர்ந்த மேரி, முகைதீன் பிச்சை, சுஜீத்குமார், ஆவுடையப்பன், காஜா மூகைதீன், மிக்கேல், காஜா, செய்யது, சீதாராமன், சுரேஷ், ஆலுராம், ரசுல் பீவி, சொர்ணம், பீர் பாத்திமா, எவர்லீன், சண்முகலெட்சுமி, பானு, அப்சரா, பாமா, அமீர்ஜான், ரம்யா, வள்ளியம்மாள் உள்பட பலர் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதில் மேரி, முகைதீன் பிச்சை ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Thursday, June 17, 2010

kilakarai municipality members fight

ரயில் பாதை தகர்ப்பு-எம்.எல்.ஏ. ஹசன் அலி மீது குற்றம் சாட்டிய வக்கீலுக்கு சம்மன்

விழுப்புரம்: ராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் அலி மீது விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்க்கப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டிய வழக்கறிஞரை அவரிடம் உள்ள ஆதாரங்களுடன் ஆஜராகுமாறு கியூ பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த 12-ம் தேதி விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விழுப்புரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த கண்ணன், பாபு என்ற 2 வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலிக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் தங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அதை விசாரணையின் போது ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதை அடுத்து குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு வழக்கறிஞர் கண்ணனுக்கு கியூ பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்

கீழக்கரையில் போலீசார் சைரன் ஒலியுடன் ரோந்து

கீழக்கரையில் சைரன் ஒலியுடன் போலீசார் இரவு ரோந்தில் ஈடுபட்டுள்ளதால் திருடர்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வீடுகளை பூட்டிவிட்டு சென்று விட்டதால், உள்ளுரில் உள்ள சமூக விரோதிகளின் தகவல்களை வைத்து வெளியூர் திருடர்கள் கைவரிசை காட்டி வந்தனர்.ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சங்கு தலைமையில் போலீசார் நாள்தோறும் இரவு ரோந்து பணியில் மும்முரமாக உள்ளனர். ரோந்தின் போது போலீஸ் வாகனத்தில் உள்ள சைரனை ஒலித்தபடி செல்கின்றனர்.இதனால் மக்கள் மத்தியில் அச்சம் நீங்கியுள்ளது.தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் உத்தரவின் படி பஸ்ஸ்டாண்ட்,மார்க்கெட் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தையும் தனிப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்

பாராட்டு

கீழக்கரை உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் சார்பில் ஹமீதியா பள்ளியில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆமினா பீவி, குழந்தை தெரஸா ஆகியோர்களுக்கு பிரிவு உபசார பாராட்டு விழா ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. ஹசன் அலிஎம்.எல்.ஏ.,,பள்ளி தாளாளர் டாக்டர் செய்யது அப்துல் காதர், தொடக் கப்பள்ளி தாளாளர் அக்பர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.பாராட்டுக்கு நன்றி தெரிவித்து தலைமை ஆசிரியர்கள் ஆமினா பீவி,குழந்தை தெரசா பேசினர்

சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை பாடங்கள் துவங்குவதில் தாமதம்

கீழக்கரை பகுதியில் உள்ள சில நர்சரி,பிரைமரி பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் கிடைக்காததால் பாடங்கள் துவங்க தாமதமாகிறது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே வகையான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத் தில் சமச்சீர் கல்வி அரசால் கொண்டு வரப்பட்டது. நடப்பாண்டில் பள்ளி திறக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கீழக்கரை அருகே உள்ள சில நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகம் வழங்கப்படவில்லை.இதனால் பாடங்கள் துவங்க முடியாத நிலை உள்ளது.
இந்த புத்தகங்கள் மானாமதுரை சிப்காட்டில் உள்ள பாடநூல் கழகத்தில் வினியோகம் செய்யப் படுகிறது. சமச்சீர் கல்வி புத்தகத்திற்கான அரசு நிர்ணயித்த தொகையை டிராப்ட் எடுத்து ,உதவி தொடக்க கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் மானாமதுரை சென்றால் அங்கு புத்தகம் கையிருப்பு இல்லை என கூறுகின்றனர்.இதனால் நேரவிரையம், மனஉளைச்சல் ஏற்பட்டு ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
திருப்புல்லாணி ஏ.இ.ஓ.,கதிரேசன் கூறியதாவது: சமச்சீர் கல்வி புத்தகம் கிடைக்கவில்லை என எவ்வித புகார்களும் நர்சரி,பிரைமரி பள்ளிகளிலிருந்து வரவில்லை. கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தால் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

Wednesday, June 16, 2010

'ஹஜ் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு

டெலிபோன் பழுதால் அவதி !

கீழக்கரையில் அடிக்கடி டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்படுவதால் மக்களும், வியாபாரிகளும் பெரும் அவதியடைகின்றனர். கீழக்கரையில் இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான டெலிபோன் இணைப்புகள் உள்ளன. தரைவழி தொடர்பு இணைப்பை பல் வேறு பணிகளுக்காக வியாபாரிகள், பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாள் தோறும் பல்வேறு இடங்களில் இணைப்புகள் பழுதாகி விடும் நிலையில் உள்ளது. புகார் தெரிவித்தாலும் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்வது கிடையாது.இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை எனக்கூறி நாட்களை கடத்துகின்றனர். தனியார் நிறுவனத்தினர் பல்வேறு சலுகைகளுடன் புதிய வாடிக்கையாளர்களை பெற முயற்சித்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல்., டெலிபோன் துறை ஊழியர்களின் பழுது நீக்க தாமதத்தால் மேலும் ஏராளமானோர் இணைப்பை ரத்து செய்து விட முடிவு செய்துள்ளனர். இங்குள்ள உயர் அதிகாரிகளிடத்தில் புகார் செய்ய செல்போனை தொடர் கொண்டால் பதிலளிப்பதே கிடையாது. பல்வேறு நாட்களில் ஒன்வே டிராபிக்காக டெலிபோன் இயங்கி வருகிறது.இதே நிலையில் பிராட் பேண்ட் இணைப்பும் இயங்கி வருகிறது.நிரந்தர தீர்வு காண துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு ஊர்வலம்

கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட வழிகாட்டுதலின் பேரில் கல்வி விழிப்புணர்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. நிர்வாக அலுவலர் மலைச்சாமி முன்னிலையில் தலைமை ஆசிரியர் ரவி துவக்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் ஜோசப் சார்த்தோ தலைமையில் ஆசிரியர்கள் வழி நடத்தினர்.

கீழக்கரை சகோதரரை துபாயில் காணவில்லை

கீழக்கரை சகோதரரை துபாயில் காணவில்லை
 
 
Kasim
துபாய்: துபாயில் வேலை பார்க்க வந்த சில மாதத்திலேயே வேலை பிடிக்கவில்லை என்று கூறி விட்டு தலைமறைவான நபர், துபாயிலேயே தலைமறைவாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரை நம்பி கீழக்கரையில் வசித்து வரும் அவரது அப்பாவித் தந்தையும், தங்கையும், அந்த நபர் திரும்பி வர மாட்டாரா என்ற பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

அவரது பெயர் எச். சுல்தான் அஹமது காசிம். 29 வயதாகிறது. துபாயில் உள்ள ஈடிஏ நிறுவனத்தில் ஒர்க்கர் பணியில் 3 வருடத்திற்கு முன்பு சேர்ந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

தனக்கு வேலை பிடிக்கவில்லை என்றும், ஊருக்குப் போகப் போவதாகவும் சக ஊழியர்களிடம் கூறியிருந்தாராம். இதை தனது தந்தைக்கும் கூறியுள்ளார். ஆனால், பெருமளவில் பணத்தை செலவு செய்து அனுப்பியுள்ளோம், அது திரும்பக் கிடைக்கும் வரையாவது வேலை பார் என்று அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டு துபாயிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் சுல்தான் அஹமது பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை.

மாறாக தற்போது சோனப்பூர், அல்கூஸ், ஜபேல் அலி போன்ற கேம்புகளில் உலாவி வருவதாகவும், அஜ்மானில் உள்ள சில குதிரைக்கு புல் போடும் இடத்திலும் சுற்றி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இவர் வீட்டிற்கு தொடர்பு கொள்வதோ, பணம் அனுப்புவதோ கிடையாது, இவரை எப்படியாவது தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி துபாயில் வசிக்கும் பல பேர்களை அணுகியும் யாரும் உதவி செய்யவில்லை என்று வருத்ததுடன் இவரது தாய் தந்தையர் தெரிவிக்கிறார்கள்.

நிறுவனத்தை அணுகி விசாரித்ததில் இவரை கொண்டு வந்தால் போதும் பயணச் சீட்டு எடுத்து ஊருக்கு அனுப்பிவிடலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

எனவே சுல்தான் அஹமதை யாரேனும் எங்காவது பார்த்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.

துபாய்- முஜிப் : 050 -8660154

பாலா- 050 -2120277

சுல்தானின் பெற்றோரைத் தொடர்பு கொள்ள:

S.ஹமீது இப்ராஹீம் 

நூர்ஜஹான் எலெக்ட்ரிகல்ஸ்

கீழக்கரை

போன்: 00914567 - 244640              00914567 - 244640      

செல்போன்: 0091 -9382293637              0091 -9382293637   

Thursday, June 10, 2010