
ராமநாதபுரத்தில் பெண்கள் பள்ளி அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் மாணவிகளின் வாழ்க்கை கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கழிப்பறையில் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளநிலையில், ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல் பள்ளி அருகில் தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கட்டடத்தில், சமூக விரோத நடமாட்டம் அதிகம் உள்ளது. நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி திறந்த வெளியாக உள்ள இந்த கட்டடத்தின் அருகே ,குறைவான குடியிருப்புகள் உள்ளது இவர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி உள்ளது. இந்த கட்டடத்திற்கு யார் வருகிறார், எதற்கு வருகிறார், என கேட்க ஆளில்லாததால், சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் சர்வசாதாரணமாக வந்து செல்கின்றனர். பாழடைந்த கட்டடத்திற்கு மிக அருகில் பெண்கள் பள்ளி ,மாணவியர் விடுதி உள்ளதால், இந்த கும்பலால் மாணவியர்கள் பாதிக்கும் நிலை அதிகமாக உள்ளது. இதுதவிர, வார விடுமுறை நாட்களில் கார்களில் பெண்களை அழைத்து வந்து ,பாழடைந்த கட்டடத்தில் உல்லாச வாழ்க்கை நடத்துவதும், மதுபான கூடமாக பயன்படுத்தும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக இப்பகுதியினர் பலமுறை போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் முறையான நடவடிக்கை இல்லை. இப்பகுதியினர் கூறியதாவது: சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக ,குறிப்பாக சனி ஞாயிறு நாட்களில் குறிப்பிட்ட நேரத் தில் தெரு விளக்குகள் அணைக்கப் படுகிறது. மாலை நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களுடன், பாழடைந்த கட்டடத்துக்கு பள்ளி சீருடையுடன் மாணவிகள் வருவதை பலமுறை பார்த்துள்ளோம். இங்கு ஆள்நடமாட்டம் குறைவாக உள்ளதால் ,இந்த கட்டடத்தை பல தரப்பினரும் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இங்கு குடியிருக்கவே எங்களுக்கு அச்சமாகவே உள்ளது, என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.காவனூர் பாலத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததும், மதுரை ரோட்டில் காட்டுகருவேல மரங்களுக்கு இடையே இளம் பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததும் ,இதுபோன்ற செயல் களால் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள் ளது. எனவே, இப்பகுதியில் தினமும் போலீசார் அதிரடி ரோந்து வந்து , சமூகவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும், ""பாழடைந்த கட்டடத்தை இடித்து, பெண்கள் பள்ளியின் பின்புறம் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளி நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை,'' எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment